Sunday 5 May 2013

கல்யாண சுந்தரர் விரதம்


பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பங்குனி உத்திரத்தன்று திருக்கயிலையில் திருமணம் நடைபெற்றது. இத் திருமணக்கோலமே கல்யாணசுந்தரர் வடிவம். இது பல போகங்களை அருளும் போக வடிவம். மகேஸ்வர வடிவங்களில் இது ஒன்று. இல்லறம் நல்லறமாக விளங்க இந்த வடிவத்தைப் போற்றி வழிபட வேண்டும். 

கல்யாணசுந்தரரை விரதமிருந்து வழிபட ஏற்ற நாள் அவரது திருமண நாளான பங்குனி உத்திரமே. இது சிறந்த முகூர்த்த நாள். விரதமிருக்க முடியாதவர்கள் அன்று இரவு ஒரு பொழுது மட்டும் சிறிதளவு அன்னத்தையும் அல்லது சில பழத்துண்டுகளையும் உண்ணலாம். 

குலவிரதம்......... சூல மேந்திய சூலபாணியை வழபடுவது சூல விரதம். சூலம் சிவபெருமானின் ஓர் ஆயுதம். இதன் மும்முனைகள் இச்சை, ஞாக, கிரியை சக்திகளை உணர்த்துகின்றன. தை அமாவாசையன்று இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். முழு விரதம் காக்க முடியாதவர்கள் பகலில் ஒரு பொழுது உண்ணலாம். இந்த விரதத்தைப் `பாசுபத விரதம்' என்றும் கூறுவார்கள். 

இடப விரதம்.......... மகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்தில் இடபாரூடர் - காளை வாகனர் வடிவமும் ஒன்றாகும். சிவபெருமானுக்கு காளைக் கொடியும், காளை வாகனமும் உரியன. சிவனும், சக்தியும் காளை வாகனத்தின்மேல் எழுந்தருளும் கோலத்தை இடபாரூடர் வடிவம் என்பர். 

சிவபெருமானுக்குப் பல வடிவங்கள் உள்ளன. ஆனால், காளை வாகனராகவே திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருளுகின்றார். ஆகவே  இந்த வடிவம் உச்ச நிலை சிறப்புடையது. காளை வாகனரை வைகாசி, வளர்பிறை, அஷ்டமியன்று விரதமிருந்து வழிபட வேண்டும். இது இயலாதவர்கள் பகல் ஒரு பொழுது உண்ணலாம். 

பிரதோஷ விரதம்......... தேய்பிறை, வளர்பிறை திரியோதசி நாளன்றுபிரதோஷ விரதத்தை மேற்கொள்ள வேண்டும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அமைந்த நேரத்தைப் பிரதோஷ நேரம் என்பர். பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலுக்குச் சென்று இறைவனையும், நந்தி தேவரையும் வழிபட வேண்டும். 

சோமசூத்திரப் பிரதட்சிண (பிறைவல) முறையில் வலம் வந்து, பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பது முறை. இக்காலத்தில் இப்பிரதோஷ விரதத்தைப் பக்தர்கள் மிகப் பலர் மேற்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment