Sunday 5 May 2013

கல்யாண விரதம் வழிபாடு-பலன்கள்


பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்நாளைக் கல்யாண விரதம் என்றும் அழைப்பார்கள். இந்நாளில் குறிப்பிடத்தக்க சில நிழ்ச்சிகள் நடந்துள்ளன. 

* முருகன் - தெய்வயானை திருமணம் 

* ஸ்ரீராமர் - சீதை திருமணம் 

* சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருமணம் 

* ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் 

* ரதிக்காக, மன்மதனைச் சிவபெருமான்எழுப்பித்தந்த நாள். 

* அர்ஜூனன் அவதார நாள் 

* சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் பிறந்த நாள். 

முருகன் தெய்வயானை திருமணம்......... இத்திருமண நாள் பங்குனி உத்திர நன்னாளில் நடந்தது. பங்குனி உத்திரத்தன்று திருச்செந்தூரில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மன்மதனை எழுப்பித் தந்த நாள்.......... காமன் - சிருஷ்டித் தொழிலுக்கு ஆக்கபூர்வமாக உதவுபவன். இவனது தேவி ரதியாவாள். காமன் ரதியைப் பிரிந்து வந்து, சண்முக அவதாரம் ஏற்படுவதற்காக தட்சிணாமூர்த்தி சொரூபமாக நின்ற பரமேஸ்வரன் மீது மலர் அம்புகளை ஏவ, அவரது கோபத்திற்கு ஆளாகி, நெற்றிக் கண்ணில் இருந்து கிளம்பிய அக்னியால் சாம்பலானான். 

இதுவே காமதகனம் எனப்படுகிறது. காமதகனம் நடந்ததைக் கேள்விப்பட்டு `ரதி' பதறி ஓடி வந்து சிவபெருமானை வணங்கி வேண்ட, காமன் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டான். ரதியின் கண்களுக்கு மட்டுமே காட்சி தரும் சக்தியைப் பெற்றான். காமதகனம் நடைபெற்ற இடம், தமிழ்நாட்டிலுள்ள `திருக்குறுங்கை'. இந்த ஊரில் உள்ள குளத்தின் அடிப்பகுதி சாம்பல் மயமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். 

மன்மதன் மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்த நாள் பங்குனி உத்திரத் திருநாளாகும். காமதகனத்தன்று மன்மதன், ரதி தம்பதிகளை வழிப்படுவோர் சிவபெருமானின் பரிபூரண அனுக்கிரஹத்தை அடைவர். 

அர்ஜூனன் அவதார நாள்.......... பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாகப் பிறந்தவன் அர்ஜூனன். பத்துவிதப் பெயர்களை உடையவன் அவன். கூர்மையான பார்வையை உடையவன். நினைத்தபொழுது, நினைத்தப்படி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும். அதனால் அவன் `குடாகேசன்' என்று அழைக்கப்பட்டான். 

கிருஷ்ணன் அர்ஜூனனுக்குக் கீதையை உபதேசித்தான். கீதை பிறக்கக் காரணமாய் இருந்தவன் அர்ஜூனன். எனவே அர்ஜூனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment