Tuesday 7 May 2013

வசிஷ்ட மகரிஷி


ரிஷிகளில் வசிஷ்டருக்கு சிறப்பிடம் உண்டு. ஆதிகாலத்தில் பிரம்மா படைப்புத்தொழிலைச் செய்தபோது, பிரஜாபதிகள் என்னும் பத்துப்பேரை முதலில் உண்டாக்கினார். அவர்கள் பல்லாயிரக்கணக்கான கோடிமக்களை உருவாக்கி உலகத்தை விரிவாக்கினர். அவர்களில் ஒருவர் வசிஷ்டர். அதனால் வசிஷ்டர் பிரம்மாவின் பிள்ளை என்கிறது ராமாயணம்.வசிஷ்டரின் பிறப்புக்கு வேறு புராணகாரணமும் சொல்வார்கள். மித்ரன், வருணன் என்று இரண்டு தேவர்கள் இருந்தனர். அந்த இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் என்பதால் அகத்தியர், வசிஷ்டர் இருவரும் மைத்ராவருணி என்ற பெயரால் அழைக்கப் படுவதாக  ரிக்வேதத்தில் கூறப் பட்டுள்ளது. 

வசிஷ்டரிஷியின் மனைவியான அருந்ததி, கர்தம பிரஜாபதி, தேவஹூதி தம்பதியரின் புதல்வியாகப் பிறந்தவள். இவள் சிறந்த பதிவிரதையாக வாழ்ந்ததால் பத்தினிக்கடவுளாகப் போற்றப்படுகிறாள். கணவரைப் போலவே மகாதபஸ்வியாக வாழ்ந்தவள் அருந்ததி. திருமணங்களில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் வழக்கம் உண்டு. மணமகளுக்கு மிகச்சிறிய நட்சத்திரமான அருந்ததி நட்சத்திரத்தை காட்டும் மணமகன், இவள் அருந்ததியை உதாரணமாகக் கடைபிடித்து வாழவேண்டும் என்று சொல்லும் சடங்கு மிக நயமானது. வசிஷ்டரை விட்டுப் பிரியாத பாக்கியம் பெற்றவள் அருந்ததி. ஒருமுறை வால்மீகி ஆஸ்ரமத்திற்கு, சீதையின் தந்தையான ஜனகர் வந்தபோது, அங்கு தற்செயலாக வந்திருந்த அருந்ததியைக் கண்டு கைகூப்பினார். அவளும் உபநிஷத் வாக்கியங்களைச் சொல்லி ஜனகரை வாழ்த்தியதாக உத்தர ராமசரித கதை கூறுகிறது.

பிரம்மாவின் பிள்ளையாகப் பிறந்த இவருக்கு வேதங்களும், நந்தினி என்ற ஒரு தெய்வீகப்பசுவுமே செல்வமாக இருந்தது. நந்தினி பசுவின் காரணமாக, வசிஷ்டர் விஸ்வாமித்திரரின் பகையை சந்திக்க வேண்டி வந்தது. விஸ்வாமித்திரர்  ரிஷியாவதற்கு முன் கவுசிகன் என்ற மன்னனாக இருந்தார். அவர் ஒருமுறை காட்டிற்கு வேட்டையாட வந்த போது, வசிஷ்டரின் ஆஸ்ரமத்தைக் கண்டார்.வசிஷ்டர்,  கவுசிகனை வரவேற்று அவருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் கணநேரத்தில் விருந்தளித்தார். இதைக் கண்டு கவுசிகனுக்கு பிரமிப்பு உண்டானது.ஆள் நடமாட்டம் இல்லாதகாட்டில் நினைத்தவுடனே வசிஷ்டர் விருந்து கொடுத்துவிட்டாரே என்று ஆச்சரியப்பட்டார். அங்கிருந்த நந்தினி பசு மூலமே இத்தகைய இனிய விருந்தை தர முடிந்தது என்று தெரிந்து கொண்டார். கவுசிகன் வசிஷ்டரிடம், ஆயிரம் பசுக்களைக் கூட உங்களுக்குத் தருகிறேன். எனக்கு நந்தினிப்பசுவைத் தாருங்கள், என்று கேட்டார். 

ஆனால், வசிஷ்டர் சம்மதிக்கவில்லை. கவுசிகன் பலாத்காரத்தால் சண்டையிட்டு பசுவைக் கொண்டுபோக எண்ணி போர் தொடுத்தார். ஆனால், வசிஷ்டர் கவுசிகனின் சேனைகளைத் தோற்கடித்தார். அவமானம் தாங்காமல் கவுசிகன் தலைகுனிந்தார். ஆட்சியில் இருப்பவர்களை விட தவசீலர்களுக்கே மதிப்பு அதிகமென்பதைப் புரிந்து கொண்டு, தவம் செய்யத் தொடங்கினார். தவத்தில் வென்று, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டத்தையும் பெற்றார். அவரே விஸ்வாமித்திரர் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். ரிஷி என்றாலே இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பது நியதி. வசிஷ்டரின் புத்திரர்களில் மூத்தவர் சக்தி. இவரைக் கல்மாஷபாதன் என்னும் நரமாமிசம் சாப்பிடும் ராட்சஷன் கொன்று தின்று விட்டான். வசிஷ்டருக்கு தன் பிள்ளை இறந்துவிட்டதால் புத்திரசோகம் உண்டானது.

உலகில் பிறந்த உயிர்கள் எல்லாம் என்றாவது ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்ற நியதி வசிஷ்டர் அறியாததா என்ன? இருந்தாலும், அவருடைய மனம் ஒருநிலையில் நிற்கவில்லை. அலைபாய்ந்தது. பின் 49 நாட்கள் செய்யும் ஏகஸ்மாந்ந பஞ்சாச யாகம் என்னும் யாகத்தைச் செய்தார். இதன் பயனாக மீண்டும் புத்திரபாக்கியம் பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் கல்மாஷபாதனையும் கொன்று தன் வஞ்சத்தைத்தீர்த்துக் கொண்டார். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த திரிசங்கு மன்னன், மனித உடலோடு சாகாமலே சொர்க்கம் செல்ல வேண்டும் என விசித்திரமான  ஆசை கொண்டான்.  தன் குலகுருவான வசிஷ்டரை அணுகி தன்விருப்பத்தைச் சொன்னான். ஆனால்,திரிசங்கு! நீ நினைப்பது நடக்காத காரியம். அந்த எண்ணத்தை இன்றோடு கைவிட்டுவிடு! என்றார் வசிஷ்டர். அவனுக்கு ஆவல் தணியாமல் மேலும்  மேலும், அதிகரித்துக் கொண்டே போனது. வசிஷ்டரின் பிள்ளைகளை போய் பார்த்து தன் நிலையை எடுத்துச் சொன்னான். 

அவர்கள் திரிசங்குவின் பேராசையைக் கண்டு கோபம் கொண்டு,நீ சண்டாளனாகப் போ! என்று சபித்துவிட்டனர். இறுதியாக திரிசங்கு விஸ்வாமித்திரரைச் சந்தித்தான். வசிஷ்டரின் மீது கொண்ட பகையால் இதை ஒருசவாலாக எண்ணி ஏற்றுக் கொண்டார். இதனால், அரும்பாடுபட்டு சேமித்து வைத்த தபோசக்தியை எல்லாம் இழந்தார்  விஸ்வாமித்திரர். வெற்றி வசிஷ்டருக்குத் தான் கிடைத்தது. வசிஷ்டர் தமது தவமகிமையால் நினைத்தபடி எல்லாவற்றையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர் தான். ஆனால், அவருடைய செயல்கள் எல்லாம் நியாயத்தின் அடிப்படையில் தான் இருக்கும். தன் உடலோடு வசிஷ்டர் பல உலகங்களுக்கும் அவ்வப்போது செல்வதுண்டு. ஆனால், அங்கேயே நிலையாக இருப்பதில்லை. யாகங்கள் முடிந்தவுடன் அங்கிருந்து வந்து விடுவார். தசரதசக்கரவர்த்தியின் தேர் பத்து திசைகளிலும் தடையின்றிச் செல்லும். வசிஷ்டரிஷியின் மகிமையால் தான் இப்பெருமை தசரதருக்கு வந்தது. அதைப்போலவே ரகு மகாராஜன் என்னும் மன்னனுக்கு, குபேரனிடம் செல்வதற்காகஒரு விசேஷமான தேரினை பெற்றுத் தந்தவர் வசிஷ்டர் தான். 

ரகுவம்சத்தில் காளிதாசர் இதை அழகாக விவரிக்கிறார்.ராமாயணத்தில் தசரதருக்கு புத்திரகாமேஷ்டி யாகத்தை செய்து எம்பெருமான் விஷ்ணு ராமாவதாரத்தை இப்பூமியில் எடுக்கச் செய்த பெருமை வசிஷ்டருக்கே உரியது. இன்னும் சொல்லப்போனால், குலகுரு வசிஷ்டரால் தான் ராமாயண வரலாறு முழுவதுமே திட்டமிடப் பட்டது. ராவண யுத்தம் முடிந்தபின், ராமனுக்கு வசிஷ்டரே முடி சூட்டி வைத்தார். ராமராஜ்யத்திற்கு முடிசூட்டிய பெருமை இவரையே சேரும். சூரியகுலத்தில் இக்ஷ்வாகுவம்சத்து மன்னர்களுக்கெல்லாம் குலகுருவாக இருந்து ராஜ்யபரிபாலனம் செய்ததில் வசிஷ்டர் முக்கியபங்கு வகித்தார்.

No comments:

Post a Comment